புத்தாண்டுப் பலன்கள் 2017 - கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Posted on:
2017-04-01 00:46:51

http://astrology.dinakaran.com/Karan_img/Astrology/images/aries02.jpgகம்பீரமான தோற்றத்தையும் பரந்த மனப்பான்மையும் கொண்ட உங்கள் உள்ளம் உறுதி வாய்ந்தது. எப்போதும் உற்சாகமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பீர்கள். சோர்ந்திருப்பது உங்களுக்குப் பிடிக்காது. செய்வன திருந்தச் செய் என்பதற்கேற்ப உங்கள் செயல்பாடுகளில் யாராவது குறை கண்டுபிடிப்பது கடினம். அந்த அளவுக்கு எதையுமே சிறப்பாகவும், செம்மையாகவும் செய்து முடித்து பலருடைய பாராட்டுகளைப் பெறக் கூடியவர்கள் நீங்கள். நீங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகக் காண்பீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு: உயரதிகாரிகளின் ஆதரவை உறுதுணையாகக் கொண்டு உங்கள் பெரும்பாலான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சக பணியாளர்களின் பொறாமைப் பார்வை உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும்.

வியாபாரிகளுக்கு: கடன் விஷயத்தில் கவனமாக இருந்தால் மனநிறைவிற்கு குறைவிராது. வியாபாரம் லாபகரமாகவே நடைபெற்று வரும். நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று வியாபாரத்திலும் வளர்ச்சியைக் காண்பது அவசியமாகும். அதே நேரத்தில் அவர்களைத் திருப்தியடையச் செய்யும் வகையில் தரமான பொருட்களை கொள்முதல் செய்து வைப்பது வியாபாரத்தை பெருக்க உதவும்.

கலைத்துறையினருக்கு: இடைத்தரகர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்து வருவதன் மூலம் புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ இடமுண்டு. பின்னணி இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் போன்றோர் கூடுதலான வாய்ப்புகளைப் பெற முடியும். வெளியூர்ப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்ள நேரும்.

மாணவர்களுக்கு: நீங்கள் முயற்சித்தால் கல்வியில் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண முடியும். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று உயர்வகுப்புகளுக்குச் செல்லக் கூடும். இடையில் நிறுத்தி வைத்திருந்த சில பகுதிகளுக்கான தேர்வுகளையும் இப்போது எழுதி நிறைவு செய்வீர்கள். சிலர் உயர் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லவும் முயன்று வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு: உங்களுக்கு சில சோதனைகள் நேர இடமுண்டு என்றாலும் நீங்கள் உறுதியான மனத்துடன் இருந்து பொறுமை காத்து வருவதன் மூலம் தலைமையின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். மனதை அலைபாயவிட்டு மற்றவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி நிலை தடுமாறுவது எதிர்காலத்தில் துன்பம் தரும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு நடப்பது அவசியம்.

பெண்களுக்கு; வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிபாராத நன்மைகளைப் பெறக் கூடும். தள்ளிப்போய் வந்த திருமணம் திடீரென்று முடிவாகி திருமண வாய்ப்பைச் சிலர் பெறக்கூடும். உடல்நலத்தில் சிறுசிறு உபாதைகள் அடிக்கடி ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் கவனமாக இருந்து வருவது நல்லது.

நட்சத்திரப் பலன்கள்

அஸ்வினி: சிறு விபத்துகள் ஏற்படக்கூடிய நிலை தென்படுவதால் பயணங்களின்போது மிகுந்த கவனமும் நிதானமும் தேவை. உணவு விஷயத்தில் கவனமாகவும் கட்டுப்பாடாகவும் இருப்பதன்மூலம் வயிற்றுக் கோளாறுகளிலிருந்து விடுபட முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சியடையக் கூடிய நிலை உண்டு. உத்யோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறும் வகையில் உங்கள் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களால் அனுகூலமடையும் வாய்ப்பு சிலருக்கு அமையக் கூடும்.

பரணி: பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் எதுவாயினும் கிடைக்க வாய்ப்புண்டு. ஆலய தரிசனம் கண்டுவர குடும்பத்துடன் ஒரு பயணத்தை மேற்கொண்டு திரும்புவீர்கள். அரசு வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். நீர்நிலைகளில் எச்சரிக்கை தேவை. அவசர பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. சகோதர வழியில் திருப்தி தரக்கூடிய ஒத்துழைப்பு கிடைத்து வரும். சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவதில் முனையக் கூடும். பணப் புழக்கம் மனநிறைவு தரும் வகையிலே இருந்து வரும். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சனை எதுவும் இராது என்றாலும் பெருந்தொகை கடன் கொடுக்கும்போது போதிய ஆவணங்கள் இல்லாமல் கொடுப்பது கூடாது.

கிருத்திகை: கிருத்திகை முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் எதிலும் அவரசப்பட்டு ஈடுபடாதீர்கள். ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து சாதக பாதகங்களை அறிந்த பின்னர் திட்டமிட்டுச் செயல் படுத்துவது நல்லது. கோபத்தைக் குறைத்து அனைவரிடமும் கனிவாகப் பேசிப் பழகுவது நல்லது. பயணங்களின்போது மிகவும் எச்சரிக்கையாய் இருந்து வருவது அவசியம். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு ஏற்படக்கூடிய நிலை உண்டு. நண்பர்களால் சிலர் அனுகூலமடையக்கூடும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.

பரிகாரம்:

செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

ஓம் சரவணபவஎன்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.

ரிஷபம்

கவர்ச்சிகாரகன் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு வட்டம் இருந்து கொண்டேயிருக்கும் என்னும் அளவுக்கு உறவினர்களை விட நண்பர்கள் வட்டம் உங்களுக்குப் பெரிதாயிருக்கும். எல்லோரையும் பற்றிய விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்களான நீங்கள், அவர்களின் குணாதிசயங்களையும் நன்றாக உணர்ந்தவர்களாகவே இருப்பீர்கள். இந்த ஆண்டு சிலருக்கு புதிய வீடுகளுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும். 

வியாபாரிகளுக்கு: முழுமனநிறைவைப் பெறக்கூடிய வகையில் லாபம் கணிசமான அளவுக்கு உயரும். இருப்பினும் வியாபார தலத்தில் உங்கள் நேரடிப் பார்வை இருந்து வருவது அவசியம். கூடுமானவரை வாடிக்கையாளர்களை திருப்தி செய்வதில் உங்கள் கவனம் இருக்க வேண்டும். இல்லையெனில் போட்டியாளர்களின் பக்கம் உங்கள் வாடிக்கையாளர்களின் பார்வை திரும்பிவிட இடமுண்டு. எனவே, தரமான பொருட்களை கொள்முதல் செய்வதில் நீங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துவது அவசியம். 

கலைத்துறையினருக்கு: புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம் என்பதால் நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமலேயே வாய்ப்புகள் தேடிவரும். சக கலைஞர்களின் போட்டியும் கடுமையாகவே இருக்கக் கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. 

மாணவர்களுக்கு: படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டுப் போட்டிகள் போன்ற பிற துறைகளிலும் நீங்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.  சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறக்கூடிய நிலை உண்டு.  அரசு வழங்கும் கல்விச் சலுகைகள் போன்றவற்றைப் பெற்று மகிழ்வீர்கள்.  நீங்கள் பிற துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றாலும் இப்போதைக்கு படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்தாக வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு:   உங்கள் தன்னலமற்ற உண்மையான தொண்டின் காரணமாக தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள்.  உங்கள் மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத் தரும்.  இதன் காரணமாக  உங்கள் பொருளாதார அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வது சாத்தியமாகும்.  தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மிகவும் மதிப்பார்கள் என்பதால் நாளுக்கு நாள் உங்கள் செல்வாக்கு உயரக் காண்பீர்கள்.  உங்கள் மன உறுதியைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.

பெண்களுக்கு: வேலையின் நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருந்தவர்கள் இப்போது சேர்ந்து வாழும் நிலைமை உருவாகும். திருமணம் தள்ளிப்போய் வந்த சிலருக்கு இப்போது திருமண யோகம் கிட்டும்.  சிலருக்கு மனம் விரும்பியவரையே மாலையிட்டு மணம் முடிக்கும் வாய்ப்பு அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.  திருமணம் போன்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து மகிழும் வாய்ப்பு உண்டு.  

நட்சத்திரப் பலன்கள்

கிருத்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள்: இந்த ஆண்டில் புதிய, சொத்துகள் அமையும் வாய்ப்பு உருவாகும்.  குடும்பத்தினரின் தேவைகளை நல்ல முறையில் நிறைவேற்றி அவர்களை திருப்திப்படுத்துவீர்கள்.  நல்லவர்களின் அறிமுகமும்,  நட்பும் கிடைப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும்.  மகன் அல்லது மகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.  சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் அமையக்கூடும்.  கோபத்தைக் கட்டுப் படுத்துவதும், வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது நிதானமாக இருந்து வருவதும் அவசியம்.  

ரோகிணி:  இந்த ஆண்டில் எதிலும் நிதானமாகச் செயல்படுவதன் மூலம் தாமதமின்றி முழுமையான வெற்றியைப் பெற முடியும்.  குழப்பத்துக்கு இடம் கொடுக்காதீர்கள்.  அரசு வழியில் சிலர் நன்மைகளைப் பெற்று மகிழ வாய்ப்பு உண்டு. மனைவியின் பெயரில் அசையாச் சொத்துகளை சிலர் வாங்க முற்படுவீர்களாயினும் ஆவணங்களை சரியாகப் பரிசோதனை செய்து,  வாஸ்து நிபுணர் ஒருவரின் ஆலோசனைகளையும் பெற்ற பின்னர் வாங்குவது நன்மை தரும்.  பிற்காலத்தில் தொல்லை நேராமல் தவிர்க்கலாம்.  பொருளாதார நிலையில் திருப்திகரமான போக்கு தென்படும்.

மிருகசீரிஷம் 1, 2 ஆம் பாதங்கள்: இந்த ஆண்டு சகோதர வழியில் செலவு உண்டு.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய சந்தர்ப்பம் கைகூடி வரும்.  இதற்கு உறவினர்களின் ஒத்துழைப்பு பெரிதும் உதவக்கூடும்.  நண்பர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையிலேயே இருந்து வரும்.  கடிதத் தொடர்புகளால் களிப்பு தரும் செய்திகளைக் கேட்க வாய்ப்பு உண்டு. எதிர்பாராத தனவரவு சிலருக்கு ஏற்படக்கூடும். வழக்குகளில் வெற்றி உண்டு.  வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்பாராத ஊதிய உயர்வு போன்ற நன்மைகளைப் பெற்று உற்சாகமடைவீர்கள்.

பரிகாரம்: 

வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். பணப் பிரச்னை நீங்கும். உறவினர் மற்றும் நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும். 

மிதுனம்

பொதுவாக மிகவும் சாதுவான தோற்றத்தைக் கொண்டவர்களான நீங்கள் பார்வைக்குத்தான் அப்படியே தவிர, மற்றபடி அறிவுக் கூர்மையும் அன்புள்ளமும் செயலாற்றலும் மிக்கவர்கள்தான்.  தேவையான நேரத்தில் அவற்றையெல்லாம் முழுமையாக வெளிப்படுத்தி பிறரை வியப்படையச் செய்வீர்கள்.  தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு ஆளாகித் தவிப்பதைத் தவிர்த்தால் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிட வாய்ப்புண்டு.  மற்றவர்களிடம் கை நீட்டி நின்று சேவகம் புரியும் அவசியம் இல்லாமல் பலரையும் அதிகாரம் செலுத்தி வேலை வாங்கும் அமைப்புடையவர்கள் நீங்கள்.  சுயமாகத் தொழிலோ, வியாபாரமோ செய்வதிலும், மற்றவர்கள் பலரையும் அனுசரித்துப் போவதிலும், விருப்பம் மிகக்கொண்ட உங்களுக்கு, இந்த வருட பலனைப் பார்ப்போம். இந்த ஆண்டு உழைப்பு கூடினாலும் அவற்றுக்கு இரட்டிப்பான வருமானம் கிடைக்கும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். 

உத்யோகஸ்தர்களுக்கு: உங்கள் பணிகளில் கவனக் குறைவு கூடாது.  சக பணியாளர்கள் உங்கள் மீது புகார் எழுப்பத் தயாராயிருப்பார்கள்.  மறைமுக வருமானங்களில் அதிக எச்சரிக்கை தேவை.  நீங்கள் எதிர்பார்த்தபடி சிலருக்கு இடமாற்றங்கள் கிடைக்கக் கூடுமாயினும் உங்களுக்குத் திருப்திதர முடியாதபடி கடுமையான வேலைப் பளு நிறைந்ததாக இருக்கக் கூடும்.  உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறக்கூடிய வகையிலும்,  புகார் எழ வாய்ப்பில்லாத நிலையிலும் உங்கள் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் இருந்து வருவது அவசியம். 

வியாபாரிகளுக்கு: உங்கள் எதிரிகள் உங்களுக்குப் போட்டியாக கடுமையாக இயங்கக் கூடும் என்பதால் உங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நீங்கள் புதுமையாக ஏதேனும் சலுகைகளை அறிவித்து அவர்களை உங்கள் பக்கமே தக்க வைத்துக் கொள்வதன் மூலம் வியாபாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படாமல் குறைந்தபட்ச லாபத்துடன் நடைபெற்று வர வழிவகுக்கலாம்.

கலைத்துறையினருக்கு: புதிய வாய்ப்புகள் அமைவதற்குரிய நிலை சாதகமாக இல்லை என்றாலும் கடுமையாக உங்கள் முயற்சிகளைத் தொடர்வது அவசியம்.  உங்கள் வசதிகளில் பெரும்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் அளவில் சில வாய்ப்புகளை பெறக்கூடும்.  எல்லாரிடமும் இனிமையாகப் பேசி பழகுங்கள்.  இசை, நடனக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் போன்ற பிரிவினர் கூடுதல் வாய்ப்புகளைப் பெறக்கூடும்.  வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளும்போது மிகுந்த நிதானமாகவும், சிக்கனமாகவும் நடந்து கொள்வது அவசியம்.  புதிய வாய்ப்புகள் கிட்டும். அதன் மூலம் நற்பெயர் கிடைக்கும்.

மாணவர்களுக்கு:  விளையாட்டை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. சிலர் படிப்பை நிறுத்தி விட்டு உத்யோக வாய்ப்புகளைப் பெறவும் முயலக் கூடும்.   

அரசியல்வாதிகளுக்கு: எதிலும் எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய ஆண்டாக அமைகிறது. சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும். கட்சியில் உங்கள்மீது கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படலாம். வாயைக் கொடுத்து விவகாரத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அதே நேரம் பயணங்களில் வெற்றியடைவீர்கள்.

பெண்களுக்கு: எதிலும் பொறுமையும், நிதானமும் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும்.  உடல் நலத்தில் அக்கறை தேவை.  கருவுற்ற பெண்களுக்கு கவனம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் நன்மைகளுக்கு வழிவகுக்கும். யாரிடமும் தேவையில்லாத பேச்சுகளை பேச வேண்டாம்.

நட்சத்திரப் பலன்கள் 

மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதங்கள்:  இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்தப் பிரச்னையும் எளிதில் முடியாமல் தாமதம் ஆகக்கூடும் என்பதற்காக நீங்கள் அவசரப்படாதீர்கள். இறைவழிபாடு, தியானம் போன்றவற்றில் மனத்தைச் செலுத்துவது நல்லது. 

திருவாதிரை:  இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் குறைந்த பட்ச ஆதாயத்தைப் பெறக்கூடும்.  நஷ்டம் பற்றிக் கவலைப்படாதீர்கள்.  அதற்கு வாய்ப்பு இல்லை.  உறவினரின் ஒத்துழைப்பை எல்லாம் பெருமளவில் எதிர்பார்ப்பதற்கில்லை.  பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பிறமொழி பேசும் ஒருவரால் நன்மை உண்டாகும். தொழில் முயற்சிகளில் கவனம் தேவை.

புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்: உத்யோகஸ்தர்களில் சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.  வேலை தேடிக் கொண்டிருந்தவர்களில் சிலருக்கு இப்போது நல்லதொரு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.  பெரும்பாலானவர்களுக்கு இனம் புரியாத தேவையற்ற மனக்கலக்கம் ஏற்பட்டு நிவர்த்தியாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி தள்ளிப் போகலாம். கடன் கிடைக்குமாயினும் வாங்காமலேயே சமாளிப்பது பிற்காலத்திற்கு உதவியாக அமையும். ஜாமீன் கையெழுத்துபோட்டு கடன் வாங்கித் தர முயற்சிக்காதீர்கள்.

பரிகாரம்: 

புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசியை அர்ப்பணித்து 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும். 

 

கடகம்

கற்பனை வளம் மிக்கவர்களாகிய நீங்கள் எழுத்துத்துறையில் பிரகாசமான வாய்ப்புகளைப் பெறக் கூடியவர்கள் என்பதால், உங்கள் படைப்புகளை வெளியிட்டோ, திரைப்பட வசனகர்த்தா, பாடலாசிரியர் போன்ற வாய்ப்புகளை பெற்றோ பிரபலமும் புகழும் அடைவீர்கள். இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல் சிலநேரங்களில் குழப்பத்துக்கு ஆட்பட்டு அல்லல்படுவது உண்டு. இந்த ஆண்டு காரியங்களை தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். மேலும், உங்கள் எண்ணங்களை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். அவசியமற்ற செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் காரியமாற்றுவீர்கள். 

உத்யோகஸ்தர்களுக்கு: உங்கள் அலுவலகப் போக்கில் உங்களுக்கு மிகத் திருப்திகரமான பலன்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் பெரும் சங்கடங்கள் எதுவும் ஏற்பட்டுவிடவும் வாய்ப்பில்லை என்ற அளவில் ஆறுதலடையலாம். உடல்நலத்திலும் அடிக்கடி சிறுகுறைபாடுகள் ஏற்பட்டு நிவர்த்தியாகும்.

வியாபாரிகளுக்கு: வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவு உங்களுக்கு இருந்து வரும் வகையில் நீங்கள் செயல்படுவது முதல் தேவையாகும். கொள்முதல் செய்யும்போது தரமான பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்வது மிக அவசியம். உங்கள் நேரடி கவனமும் அடிக்கடி இருந்து வருவது நல்லது. 

கலைத்துறையினருக்கு: உங்கள் தொடர்ச்சியான முயற்சிகளால் மட்டுமே புதிய வாய்ப்புகளைப் பெற முடியும் என்ற நிலையுள்ளதால்  நீங்கள் சோர்வுக்கு இடம் தராமலும், மற்றவர்களை நம்பாமலும் நீங்களே நேரிடையாகப் பார்க்க வேண்டியவர்களை பார்த்துப் பேசுவதுதான் உங்களுக்கு வெற்றி தரக்கூடும். ஓரளவு சோர்வடைந்தாலும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தத் தவறினாலும் வாய்ப்புகள் கை நழுவிப் போய்விடக்கூடும். 

மாணவர்களுக்கு: விளையாட்டு போன்ற துறைகளில் உங்களுக்கு ஆர்வம் இருக்குமாயினும் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். மின்னணுத்துறை கல்வியில் சிலர் வாய்ப்பு பெறக்கூடும். ஜாதக  தசாபுக்தி பலன்கள் பலமாக அமையப் பெற்றவர்கள் மட்டுமே உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவது சாத்தியமாகும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று ஹாஸ்டல்கள் போன்றவற்றில் தங்கிப் படிக்க நேரலாம். 

அரசியல்வாதிகளுக்கு: உங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றி  தலைமையின் பாராட்டுகளைப் பெறுவது இப்போதைய நிலையில் மிகக் கடினமானதாக இருக்கக் கூடும். 

பெண்களுக்கு: இதுவரை பல காரணங்களால் தள்ளிப்போய் வந்த சிலரது திருமணம் நிறைவேற வாய்ப்புண்டு. மறைமுக சேமிப்புகளில் ஓரளவு பணம் சேரும் என்பதாலும் அது உங்கள் கணவரின் பணத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் அவருக்குத் தக்கசமயத்தில் பயன்படக்கூடிய வகையில் அமையும். பூர்வீகச் சொத்து மூலம் சிலருக்கு தனவரவு ஏற்படக்கூடும். வேலைகளின் காரணமாக பிரிந்திருந்த தம்பதி சேர்ந்து வாழும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தேவையற்ற மனக்குழப்பங்களை விட்டுவிடுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை. 

நட்சத்திரப் பலன்கள்

புனர்பூசம் 4 ஆம் பாதம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த எல்லாப் பிரிவினருக்குமே ஏற்றமும் இறக்கமும் கூடிய நிலையே இருந்து வரும். எதிலும் எடுத்த எடுப்பிலேயே வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்பதால் தொழில், வியாபாரம் போன்ற எதுவாயினும் பெரும் ஆதாயங்களை நீங்கள் எதிர்பார்ப்பதற்கில்லை. பெரும்பாலும் கவலைகள் அதிகமாகவும் களிப்பு குறைவாகவும் காணப்படும் என்றாலும் மனச்சோர்வுக்கு இடம் கொடுக்காமல் இறை வழிபாட்டின் மூலம் மன அமைதியும் நிம்மதியும் காணலாம். தெய்வ பலம் துணை நிற்கும்.

பூசம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நிதானமான மனப்போக்கு தேவை. சகோதர வழியில் சங்கடங்களைச் சந்திக்க நேரும். குடும்பத்தினரிடம் மனகசப்பு கொள்ளும் சூழ்நிலையில் மன அமைதி இழக்கும் நிலை ஏற்படுமாயினும் அது சிறிது காலத்தில் மாறிவிடும்நிலை உள்ளதால் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் நிதானமாக இருந்து வாருங்கள். பெரும் பாதிப்பு எதுவும் நேர்ந்து விடாது. தொழில், வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் இருப்பது உத்தமம்.

ஆயில்யம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் மாறிமாறி வரக்கூடிய நிலை உள்ளதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்து வருவது நல்லது. அரசு வழியில் சிலருக்கு சிக்கல்கள் ஏற்பட இடமுண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. கண்ணில் சிலருக்கு கோளாறுகள் ஏற்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமாகும். சிலருக்கு திடீர் தனவரவு உண்டாக வாய்ப்புண்டு, வாகன பழுதுபார்ப்புச் செலவு சிலருக்கு ஏற்படக்கூடும். நெருப்புக்கு அருகில் பணிபுரிபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: 

துர்க்கை அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். 

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் ஸ்ரீ கர்ப்பாயை நம” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும். 

 

சிம்மம்

ராசியின் பெயருக்கேற்ப சிங்கத்திற்கே உரித்தான கம்பீரமான தோற்றம் உங்களுக்கு அமைந்திருக்கும் என்பதுடன் எதிர்ப்புகள், இன்னல்கள் எதுவாயினும் தாங்கிக் கொண்டு செயல்படக்கூடிய மன உறுதியும் உங்களிடம் அமைந்திருக்கும். அதே வேளையில் அண்டியவர்களை ஆதரித்து அன்பு காட்டும் இரக்ககுணத்திலும் உங்களை மிஞ்ச ஆளில்லை என்பதும் உண்மை. அதாவது வம்புச் சண்டைக்கு போகமாட்டீர்கள். ஆனால் வந்த சண்டையை எளிதில் விட மாட்டீர்கள். இந்த ஆண்டில் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து கொண்டிருக்கும். உங்களின் முயற்சிகளைச் செம்மைப்படுத்தி காரியங்களை ஆற்றி வெற்றி பெறுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய வீடு வாங்கி கிரகப் பிரவேசம் செய்வார்கள். 

உத்யோகஸ்தர்களுக்கு: உயரதிகாரிகளின் ஆதரவோடு, எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நற்பலன்களை எளிதில் பெற்று மகிழ்வீர்கள். மனநிறைவு பெறும் வகையில் மறைமுக வருமானங்கள் பெருகும். சிலர் விருப்ப ஓய்வின் மூலம் உத்யோகத்திலிருந்து விலகி தொழிலிலோ, வியாபாரத்திலோ ஈடுபட முனையக்கூடும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவி வரும். சொந்த வீடு இல்லாமல் இதுவரை இருந்த சிலர் சொந்த வீடு, அரசுக் குடியிருப்பு போன்ற ஏதேனும் வசதிகளைப் பெற்று மகிழக்கூடும்.

வியாபாரிகளுக்கு: உங்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்து நல்ல முறையில் இருந்து வரும். நீங்கள் தரமான பொருட்களை விநியோகம் செய்து வருவதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களும் உங்களை நாடி வருவார்கள். நீங்கள் வியாபார ஸ்தலத்தை விரிவுபடுத்தவும், வேறு புதிய இடத்திற்கு மாற்றவும் அல்லது கிளைகளைத் திறக்கவும் முயற்சி செய்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து அதிக அளவில் இருப்பு வைக்காமல் இருந்தால் நல்லது.

கலைத்துறையினருக்கு: வாய்ப்புகளைத் தேடி நீங்கள் பலரைச் சந்திக்கச் சென்ற நிலை மாறி வாய்ப்பு தரும் நோக்கில் பல முன்னனி நிறுவனங்கள் தாமே உங்களைத் தேடிவந்து வாய்ப்பு கொடுக்கும் நிலை உண்டு. உங்கள் திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெருவாரியாகப் பெறுவீர்கள். நீண்ட தூர வெளிநாட்டுப் பயணங்கள் சிலருக்கு அமையக்கூடும்.

மாணவர்களுக்கு: கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கல்விச் சலுகைகள் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. விளையாட்டு, போட்டிகள் போன்றவற்றிலும் பரிசுகளைப் பெற்று மகிழ்வீர்கள். அயல் நாட்டுப் பயண வாய்ப்புகளும், உயர் படிப்புக்காக வெளிநாடு
களுக்குச் செல்லக் கூடும். படிப்பு முடிவடைவதற்கு  முன்னரே  சிலருக்கு வேலை வாய்ப்பு முன்வரக்கூடும்.

அரசியல்வாதிகளுக்கு: உங்கள் தன்னலமற்ற தொண்டுக்கு பாராட்டுகள் குவியும். தலைமையின் நன்மதிப்பையும்  தொண்டர்களின் பெரும் ஆதரவையும் பெற்றுள்ள உங்கள் செல்வாக்கும், சொல்வாக்கும், உங்களுக்குத் தனிமரியாதையைப் பெற்றுத் தரும். பொறுப்பான பதவிகள் சில உங்களைத் தேடிவரும். 

பெண்களுக்கு: வீட்டுக்குத் தேவையான நவ நாகரிகப் பொருட்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சிகள் நடைபெற இடமுண்டு. குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் நிம்மதிக்காகவும் பெருமளவில் பாடுபடும் உங்கள்மீது அனைவருமே அன்பு செலுத்த முன்வருவார்கள்.   

நட்சத்திரப் பலன்கள்

மகம்: உங்கள் மனதில் பல்லாண்டுகாலமாகத் திட்டமிட்டு  வந்தவை யாவும்  இப்போது நடைபெறக் காண்பீர்கள். பெரும்பாலும் வீடு, மனைகளாகத்தான் அவை இருக்கும். ஏற்கனவே சொந்த வீட்டில் தான் இருக்கக் கூடுமாயினும் இப்போது மனைவியின் பெயரில் மேலும் ஒரு வீட்டை வாங்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் எந்த வகையிலும் குதூகலத்திற்குக் குறைவிராது. 

பூரம்: தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள் என்பதால் பணப் புழக்கத்தில் மிகத் திருப்திகரமான நிலை காணப்படும். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தி வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவீர்கள். 

உத்திரம் 1 ம் பாதம்: உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களில் பெரும் நற்பலன்களை எதிர்பார்க்கலாம் என்றாலும் பணப்புழக்கம் உள்ள பணிகளில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். அரசு வழியில் சில அனுகூலங்களை எதிர்பார்க்கலாம். தேவையில்லாமல் கடன் வாங்குவதைத் தவிர்த்து விடுவது நல்லது. வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் உண்டாக இட முண்டு என்பதால் அதைக் கொண்டு விரிவு
படுத்தினால் போதுமானது. 

பரிகாரம்: 

ஞாயிற்றுக் கிழமையில் சிவன் கோயிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்கப் பெறும். 

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் நமச்சிவாய” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும். 

 

கன்னி

பெருந்தன்மையும் மற்றவர்களுக்கு இயன்ற அளவிலெல்லாம் உதவ வேண்டும் என்ற பேருள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! உங்கள் பெருந்தன்மைக்கும் கௌரவத்திற்கும் குறை ஏற்படாமல் கவனித்துக் கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் நாணயமாக நடந்து கொள்வீர்கள். தெய்வ பக்தியிலும், தெய்வ பலத்திலும் சிறந்து விளங்குவீர்கள். இந்த ஆண்டில் குடும்பத்தில் பிள்ளை இல்லாதோருக்கு புத்திர பாக்கியமும், மற்றவர்களுக்கு பேரக் குழந்தை பாக்கியமும் உண்டாகும். குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். பாகப்பிரிவினை போன்றவைகளும் சுமுகமாக முடியும். வருமானம் சிறப்பாக அமையும். மனதிலிருந்த அழுத்தங்கள் விலகித் தெளிவான சிந்தனையில் இருப்பீர்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். 

உத்யோகஸ்தர்களுக்கு: உங்கள் உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற சற்று அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். சக பணியாளர்களிடம் சுமுகமாகப் பழகுவீர்கள். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. பதவி உயர்வு சிறு தாமதத்திற்குப் பிறகு கிடைக்கும். பொருளாதார நிலை முன்னேறும். உங்கள் பணிகளில் தைரியமாகவும், பொறுமையாகவும் செயல்பட்டு நன்மதிப்பைப் பெறுவீர்கள்.  

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைக்காக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியிலுள்ள கடன் தொகைகள் வசூலாகும். கொள்முதலில் கவனம் தேவை. ஒன்றுக்கு இரண்டு முறை விசாரித்து கொள்முதலில் ஈடுபடவும். தரமான பொருட்களைப் பெறுவதில் அக்கறை காட்டுவது சிறந்தது. உங்களின் செயல்கள் சராசரியான வெற்றியைக் கொடுக்கும். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கடையை அழகுபடுத்துவீர்கள். சீரான வருமானத்தால் பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை.
 
கலைத்துறையினருக்கு: பல முயற்சிக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். சக கலைஞர்களின் போட்டி உங்கள் வாய்ப்புகளுக்கு சவாலாக இருக்கும். எனினும் உங்கள் முயற்சியால் உங்களுக்கே வெற்றி கிடைக்கும். சில வாய்ப்புகள் உங்கள் பெயரை பிரபலப்படுத்தும். நிலுவையிலிருந்த பணம் வசூலாகும். கவலை வேண்டாம். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மாணவர்களுக்கு: படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. சிறு உடல் உபாதைகள் வரலாம். கவனமுடன் இருந்தால் அதைத் தவிர்க்கலாம். யோகா போன்ற பயிற்சிகளின் மூலம் ஞாபகத்திறனை பெருக்கிக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் முயற்சிகள் சில தடங்கல்களுக்குப் பிறகு நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு: இந்த ஆண்டு உங்களுக்கு தேவையற்ற வீண் சோதனைகள் வரலாம். உங்களைப் பாராட்டியவர்களே இப்போது தரக்குறைவாக பேசலாம். மாற்று முகாம்களை சேர்ந்தவர்கள் உங்களை நாடி வருவார்கள். எந்தச் சூழ்நிலையிலும் மனஉறுதியை விட்டுக் கொடுக்காமல் இருப்பது சிறந்தது. எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அதன் மூலம் பெருமையும் கிட்டும். எடுத்த பணிகளை குறைவின்றிச் செய்து வாருங்கள்.

பெண்களுக்கு: அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உங்கள் விஷயத்தில் மூன்றாவது நபர் தலையீடு இருக்காமல் பார்த்துக் கொள்ளவும். உடல் சூழ்நிலை காரணமாக அதிகம் செலவு செய்ய நேரலாம். சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். புதியதாக வாகனச் சேர்க்கை இருக்கும். சொந்த மனையில் குடியேறும் நீண்ட நாட்கள் கனவு நிறைவேறும்.

நட்சத்திரப் பலன்கள்

உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள்: பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனதிலிருந்து வந்த தேவையற்ற வீண் குழப்பங்கள் அகலும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும்போதும் நெருப்பினைப் பிரயோகப்படுத்தும் போதும் கவனம் அவசியம். தொழில் வியாபாரத்தில் நல்ல மாறுதல்களை உணர்வீர்கள். வெளிநாடு பயணம் செல்லலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

ஹஸ்தம்: எதிர்பார்க்காத பணி இடமாற்றம் ஏற்படும். எந்த விஷயத்திலும் ஈடுபடும்போதும் நேர்மறை எண்ணங்களோடு ஈடுபடுவது நல்லது. கூடுமானவரை சோம்பேறித்தனத்தை விடுவது நன்மையைத் தரும். பொருளாதார நிலை மேலோங்கும். அரசு வழியில் அனுகூலம் கிடைக்கும். பெற்றோர், உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

சித்திரை 1, 2ம் பாதங்கள்: இந்த ஆண்டு குடும்ப நிம்மதியில் சில குழப்பங்கள் வரலாம். பிள்ளைகள் வழியில் சில கவலைகள் நேரலாம். பொருளாதார நிலை மேலோங்கும். வியாபாரிகள் அதிக அளவில் முதலீடு செய்யும் முன் யோசித்து செய்யவும். தள்ளிப்போய் கொண்டிருந்த திருமணம் கைகூடும்.   

பரிகாரம்: 

அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்னைகள் தீரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் ஸ்ரீ சாஸ்தாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் ஐந்து முறை சொல்லவும். 

துலாம்

எந்த நிலையிலும் நேர்மை நெறி தவறாத தன்மை கொண்ட துலாராசி அன்பர்களே!  நீங்கள் தியாக மனப்பான்மை கொண்டவர்கள். இயல்பாக செயலாற்றலும் அறிவுத்திறனும் கொண்டவர்களாக இருப்பீர்கள். தனிப்பட்ட திறமைகள் கொண்ட நீங்கள் எப்போதுமே யாரையாவது சார்ந்து இருப்பீர்கள். 
இந்த ஆண்டில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். பல வகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள். உங்கள் பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு: நீங்கள் விரும்பும் இடமாற்றம் கிடைக்கும். ஆனால், மேலிடத்துடன் சிறிது இணக்கமாக செல்வது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள்மீது மற்றவர்கள் வீண் குற்றச்சாட்டு சுமத்த நேரலாம். கவனம் தேவை. குடும்பத்தை விட்டு சிறிது காலம் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பணிகளின் நிமித்தமாக அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். 

தொழில் துறையினருக்கு: சக போட்டியாளர்கள் மூலம் தேவையற்ற வீண் மன உளைச்சல் ஏற்படலாம். உங்களிடம் வேலைபார்க்கும் தொழிலாளர்களிடம் கனிவான உறவை கடைபிடிப்பது நல்லது. அதிக வருமானம் பெற அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உப தொழிலை ஆரம்பிக்க தருணங்கள் ஏற்படும். எந்த யோசனையையும் சரியான ஆலோசகர்களிடம் கலந்துரையாடி முடிவெடுங்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்கும் முன் ஆவணங்களை சரியாக பார்த்து முடிவெடுப்பது சிறந்தது. 

கலைத்துறையினருக்கு: உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைகூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர சிறந்த காலகட்டம் இதுவாகும். பாராட்டு, புகழ், விருது உங்களைத் தேடிவரும். பாடலாசிரியர்  பின்னணி இசைக்கலைஞர்கள்  நடன வல்லுனர்கள் ஆகியோருக்கும் ஜூன் மாதத்திற்குப் பிறகு பொன்னான காலகட்டமாக இருக்கும். சக கலைஞர்களிடம் சுமுகமாக நடந்து கொள்வது சிறந்தது. வெளியூர் பயணங்களின்போது உடைமைகளை சிறிது அக்கறை எடுத்து கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

மாணவ மணிகளுக்கு: கல்வியில் சிறிது ஆர்வக் குறைவு ஏற்படலாம். மனதை நிலையாக்கிக் கொள்ளவும். உடல் உபாதைகள் மூலம் சில தடைகள் ஏற்படலாம். உடல்நலத்தைப் பேணுவதில் அதிக சிரத்தை அவசியம். விளையாட்டில் சாதனைகளை படைப்பீர்கள். அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு அதிகமான முயற்சி தேவை. சோம்பல் கூடவே கூடாது. நினைவாற்றலை பெருக்கிக் கொள்ள பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். 

அரசியல்வாதிகளுக்கு: உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்கள் நண்பர்களே உங்களுக்கு எதிராக செயல்படலாம். ஆனாலும் புரிந்துகொண்டு செயல்படுவது நன்மை தரும். உங்களுடைய விசுவாசத்திற்கு மேலிடம் உங்களுக்கு சரியான பதவிகளை அளிப்பார்கள். சிலருக்கு சுழல் விளக்கில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். 

பெண்களுக்கு: குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்வது சிறந்தது.  நெருக்கடியான நேரத்தில் பக்குவத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பது சிறந்தது. குடும்பத்தில் அனைவரிடமும் ஏற்படும் சிக்கலான வாக்குவாதங்களில் விட்டுக் கொடுத்து போவது நன்மையை அளிக்கும். 

நட்சத்திரப் பலன்கள்

சித்திரை 3, 4ம் பாதங்கள்: இந்த ஆண்டு எதிர்ப்புகள் எந்த விதத்தில் வந்தாலும் சமாளிப்பீர்கள். எதிலும் பொறுமையைக் கையாள்வது நன்மை பயக்கும். பெற்றோர் வழியில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உத்யோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏமாற்றத்தைத் தரும். உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். 

ஸ்வாதி: இந்த ஆண்டு நிதானமாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம். தொழில், வியாபாரத்தில் பெரும் ஆதாயம் பெறுவீர்கள். உடல் நலனில் சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் மருத்துவச் சிகிச்சையின் மூலம் சரிசெய்து கொள்ளலாம். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. கடிதப் போக்குவரத்து நன்மையைத் தரும். மின்சாரம், நெருப்பு போன்றவற்றில் கவனம் தேவை. வாகனங்களை பிரயோகப்படுத்தும்போது கவனம் தேவை.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: இந்த ஆண்டு நீங்கள் எடுக்கும் முயற்சியில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவை வெற்றி அடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேண்டிய இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். கவனம் தேவை. உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும்.  எல்லாம் நல்லதே நடக்கும்.

பரிகாரம்: 

குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். 

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும். 

விருச்சிகம்

நீங்கள் எதிலும் முன்னனி பெற்று விளங்குவீர்கள். வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கான பணிகளை முன் நின்று நடத்துவீர்கள். உங்கள் சொந்த பணிகளில் சற்று சுணக்கம் காணப்படும். கவனம் தேவை. எதையும் முன்கூட்டியே அறியும் ஆற்றல் உள்ளதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். தெய்வ பலம் உங்களை வழிநடத்தும். இந்த ஆண்டில் உங்களுக்கு உதவி செய்திட பலரும் முன் வருவார்கள். மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிட்டும். செய்தொழிலில் சிறிது தேக்கநிலை இருந்தாலும் வருமானத்திற்குக் குறைவு வராது. புதிய முயற்சிகளும் ஓரளவுக்கு கை கொடுக்கும். உங்கள் செயல்களுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். திருமணப் பிரச்னை, குடும்பப் பிரச்னை ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக இருக்கும். மற்றபடி வெளியூரிலிருந்து மனதிற்கு நம்பிக்கை ஊட்டும் செய்திகள் வந்து சேரும். மேலும், பழைய கடன் பாக்கிகளும் வசூலாகும். புதுப்புது பிரச்னைகளுக்கு நூதனமாக சிந்தித்து முடிவு காண்பீர்கள். 

உத்யோகஸ்தர்களுக்கு: நீண்டகாலமாக எதிர்ப்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த சிலர் இப்போது குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். சக பணியாளர்களின் நட்புறவு உங்கள் பணிகளைக் குறைக்கும். பொருளாதார உயர்வு இருக்கும். எனினும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகவும். மேலதிகாரிகளால் சிறு உபத்திரவங்கள் இருப்பினும் அதனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. வேலைப்பளு கூடினாலும் தேவைக்கேற்ப சக ஊழியர்கள் உதவுவர். அலுவலக வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். கடமைகளில் கண்ணுங்கருத்துமாக இருப்பீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறுவர். ஊதிய உயர்வும் கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு: உங்கள் கடின முயற்சியால் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய கிளைகள் திறப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். ஜவுளி வியாபாரிகள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். வசூல் செய்வதில் சிறிது கவனத்துடன் இருப்பது அவசியம்.  படிப்படியான வளர்ச்சி நிலை உங்கள் தொழிலில் உண்டு. வேலையாட்களால் சிறு சிறு பிரச்னைகள் காணப்படும். எனினும் சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கிடைக்கும். எனவே கடன் பெறுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்து திருப்தி காண்பீர்கள்.

கலைத்துறையினருக்கு: புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சக கலைஞர்களிடம் பகைமை இன்றி சுமுகமாகப் பழகி வருவது அவசியம். சிலருக்கு விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். 

மாணவர்களுக்கு: உங்கள் படிப்பார்வம் நாளுக்குநாள் முன்னேற்றமடையும். கல்வி நிலையங்களில் சக மாணவர்களிடம் சண்டையிடுவதை தவிர்ப்பது நலம். விளையாட்டு மற்றும் பிற விஷயங்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு: உங்களின் பொறுப்பான பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலும், அவர்களின் தனிப்பட்ட அபிமானத்தையும் பெற்று மகிழ்வீர்கள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உங்களுடன் உள்ள சிலரே பொறாமைப்படுவார்கள். புதிய முயற்சிகளில் திட்டமிட்டுச் செய்தால் வெற்றி உண்டு. 

பெண்களுக்கு: குடும்ப முன்னேற்றத்தில் உங்கள் சாமர்த்தியமான போக்கு பெரிதும் பயன்படும். தாமதமாகி வந்த சிலரின் திருமணம் இப்போது முடியும். மனம்போல் மாங்கல்யம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.

நட்சத்திரப் பலன்கள்

விசாகம் 4ம் பாதம்: இந்த ஆண்டு தொழில், வியாபாரம் போன்றவற்றில் பெரும் ஆதாயங்களைப் பெறும் வழியுண்டு. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். பணப்புழக்கம் திருப்திகரமாகவே இருக்கும்.

அனுஷம்: இந்த ஆண்டு உத்யோகத்தில் மேன்மையான நிலை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப நிலையில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். புத்திரவழியில் சிறு சிக்கல் ஏற்பட்டு நிவர்த்தியாகும். சிலருக்கு கை, கால்களில் வலி போன்ற சிறு தொல்லைகள் ஏற்பட்டு குணமாகும்.

கேட்டை: இந்த ஆண்டு குடும்பத்தில் பெரிதும் அக்கறை செலுத்த வேண்டிய காலமிது. யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்து போடவோ முயற்சி செய்யாதீர்கள். குடும்பத்தில் நிம்மதியான போக்கு காணப்படும். அரசியல்வாதிகளின் செல்வாக்கும் உயரும்.

பரிகாரம்: 

துர்க்கை அம்மனை செவ்வாய்க் கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும்.  தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் தும் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும். 

தனுசு

தன்னுடைய சொந்த காலில் நின்று சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் பிறரிடம் கைகட்டி சேவை செய்ய விரும்பாதவர்கள். மனதிற்குள் எவ்வளவு சோகம் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். நேர்மையை கடைபிடித்து நடப்பதால் கம்பீரமாக பீடு நடை போடுவீர்கள். இந்த ஆண்டில் முக்கிய திருப்பங்களை காணப் போகிறீர்கள். திட்டமிடாது செய்யும் காரியங்களில்கூட வெற்றி பெறுவீர்கள். தாய்வழி ஆதரவு பெருகும். புதியவர்களின் நட்பு கிடைத்து அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களின் நம்பிக்கைகள் வீண் போகாது. சொத்துப் பிரச்னைகளும் சுமுகமாக முடியும். புதிய கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும் தேடிவரும். 

உத்யோகஸ்தர்கள்:  சிறப்பான பலன்களைப் பெற போகிறீர்கள். உங்கள் பணிகளில் அதிக சிரத்தையும் முயற்சியும் தேவை. யாரும் உங்களை குறை கூறாத அளவிற்கு நேரத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலிடம் உங்களிடம் கனிவான உறவினை கொள்ளும். அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலை நிமித்தமாக வெளியூர் பிரயாணங்கள் ஏற்படலாம். பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். 

வியாபாரிகளுக்கு: குறைந்தபட்சம் லாபம் உறுதியாகக் கிடைக்கும். போட்டிகள் அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களின் ஆதரவால் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். உங்கள் பணியாளர்களைத் தொடர்ந்து கண்காணிப்பது நன்மை தரும். யாரிடமும் அனுசரணையான உறவைக் கையாள்வது நல்லது. கூட்டு வியாபாரங்களில் கணக்கினை சரியாக வைத்துக் கொள்வது நன்மை தரும். அரசு வகையில் சில பிரச்னைகள் வரலாம். 

கலைத்துறையினருக்கு: புதிய வாய்ப்புகள் கொட்டும். அதன் மூலம் உங்களது பொருளாதார நிலை உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சக கலைஞர்களிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது ஆவணங்களை சரியாகப் படித்துப் பார்ப்பது நல்லது. வெளியூர் பயணம் செல்வதற்கு முன்பு  சரியான முன்னேற்பாடுகளை செய்து கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு: ஏழரையில் ஜென்மச் சனி ஆரம்பிக்க இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறையலாம். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. விளையாட்டில் ஈடுபடும்போது கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்வது நன்மையைத் தரும். உயர்கல்விக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலைகள் வரலாம்.

அரசியல்துறையினருக்கு: எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். மனஉற்சாகத்துடன் கட்சிப் பிரசாரங்களில் பங்கேற்பீர்கள். வழக்குகளும் முடிவுக்கு வரும். மேலும் அதிகாரம் மிக்க பதவிகளும் உங்களைத் தேடிவரும். வெற்றி தரும்படியான பயணங்களை மேற்கொள்வர். 

பெண்மணிகளுக்கு: அனைத்து காரியங்களும் சுமுகமாக முடிவடையும். குடும்பத்தாரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். கணவரிடம் நல்ல உறவு அமையும். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். புதிய ஆலயங்களுக்கு சென்று வருவர். பொருளாதாரம் நன்றாக இருக்கும். கடன் தொல்லைகள் ஏற்படாது. கடினமாக உழைத்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். உடன்பிறந்தோரின் உதவிகளால் முன்னேறுவீர்கள். 

நட்சத்திரப் பலன்கள்

மூலம்: இந்த ஆண்டு முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள். 

பூராடம்: இந்த ஆண்டு கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். அசையாச் சொத்துக்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும். 

உத்திராடம்: இந்த ஆண்டு பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அதேசமயம் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சில அநாவசியப் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும்.

பரிகாரம்: 

ராகு கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவதும் கஷ்டங்களைப் போக்கி மனதில் நிம்மதியை தரும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் சத்குருவே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.

மகரம்

கல்விமான் என்று பலராலும் பாராட்டப்படும் அளவுக்கு உங்களிடம் சிறப்பான அறிவாற்றல் மட்டுமல்லாமல், கற்பனைத் திறனும் அபரிமிதமாக அமைந்திருக்கும். இளம் வயதில் எப்படியிருப்பினும் உங்களின் அயராத உழைப்பால் ஒவ்வொருநாளும் படிப்படியாக முன்னேறி வாழ்வில் ஓர் உயர்வான உன்னத நிலையை எட்டிப்பிடித்துச் சாதனையாளராகத் திகழ்வீர்கள். மலை குலைந்தாலும் நிலை குலையாத மன உறுதி கொண்டவர்களாக இருந்து எதையும் எதிர்கொள்ளும் வல்லமையைப் பெற்றிருப்பீர்கள். சமூகத்தில் உங்கள் பெயர் கௌரவம் கூடும். இழப்புகளை ஈடு செய்யும் அளவுக்கு புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வந்து கொண்டிருக்கும். 

உத்யோகஸ்தர்களுக்கு: உங்களின் நீண்டகால விருப்பங்களெல்லாம் எளிதாகக் கிடைக்கப்பெற்று உடலும் உள்ளமும் உற்சாகமடைவீர்கள். உயரதிகாரிகளின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்குமாதலால் மறைமுக வருமானங்கள் போன்ற தனிப்பட்ட சலுகைகள் உங்கள் பொருளாதார நிலையைப் பெருமளவில் உயர்த்திவிடும்.

வியாபாரிகளுக்கு: நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகி வருவதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கும், திருப்திகரமான லாபமும் உண்டாகும். பொருளாதார நிலையில் உண்டாகும் முன்னேற்றத்தின் காரணமாக சேமிப்புகளிலும் அசையாச் சொத்துகளிலும் முதலீடு செய்வீர்கள். வண்டி, வாகன வசதிகளையும் அமைத்துக் கொள்வீர்கள். தரமான பொருட்களைக் கொள்முதல் செய்வதிலும், வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதிலும் உங்களின் நேரடி கவனத்தைச் செலுத்துவது நல்லது. 

கலைத்துறையினருக்கு: புதிய புதிய வாய்ப்புகள் பெருமளவில் தேடி வரும். வாய்ப்பு தேடி நீங்கள் பெருமளவில் அலைந்த நிலைமாறி, உங்களைத் தேடி பலர் வரும் நிலை ஏற்படும். அதற்கேற்ற முறையில் உங்கள் தகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.  சோர்வின்றி உழைத்து உங்கள்  திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துங்கள். எல்லோரிடமும் சுமுகமாகப் பழகி வருவதும் அவசியம். சிலர் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் வழங்கும் விருதுகளுக்குத் தேர்வு பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு: கல்வித்துறையில் சாதனை படைத்தவர்களாகச் சிறப்பிடம் பெற்று விளங்குவீர்கள். அரசு மற்றும் பொது சமூகநல அமைப்புகள் வழங்கும். கல்விச் சலுகைகள் உங்களுக்குக் கிடைத்து பெருமையும் புகழும் அடைவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுகளையும் பெற்று மகிழ்வீர்கள். அறிவியல், மருத்துவம் போன்ற துறையில் பயில்வோர் கூடுதல் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு: உங்கள் செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வரும். உங்கள் தன்னலமற்ற பணிகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு உங்களுக்குச் சிறப்பான பதவிகளை அளிக்கத் தலைமை முன்வரக்கூடும். தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மிகவும் மதித்துப் போற்றிப் பாராட்டுவார்கள். 

பெண்களுக்கு: குடும்ப நிர்வாகத்தில் பிரச்னைகள் எதுவும் எழாத வண்ணம் மிக நல்ல முறையில் நடத்திச் செல்வீர்கள். சிலர் விரும்பியவர்களையே மணந்து கொள்ளும் இனிய வாய்ப்பைப் பெறுவீர்கள். மணமான பெண்களில் சிலர் இப்போது மகப்பேறு பாக்யத்தைப் பெற்று மகிழ்வீர்கள். மகளிர் அமைப்புகளில் பொறுப்பானதும் பெருமைக்குரியதுமான பதவிகளைச் சிலர் பெறுவீர்கள். 

நட்சத்திரப் பலன்கள்

உத்திராடம்: 2, 3, 4ம் பாதங்கள்:  இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட காலமாக மனதிலிருந்து வந்த சிந்தனைகள் செயல்வடிவம் பெறும். உடல் நிலையில் பிரச்னை எதுவும் இராது என்பதால் மருத்துவச் செலவுகள் குறையும். வங்கிகள், வியாபார நிலையங்கள் போன்ற இடங்களில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்களும், மின்சாரம் தொடர்பான இடங்களில் பணிபுரிபவர்களும் எச்சரிக்கையாகச் செயல்பட்டு வருவது நல்லது. பெண்களால் சிலர் அனுகூலம் அடைய இடமுண்டு. சகோதர வழியில் மனக்கசப்புகள் ஏற்பட நேரலாம்.

திருவோணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பெரும்பாலான விருப்பங்கள் நிறைவேறக் கண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இதுவரை திருமணம் தள்ளிப்போய் வந்தவர்களுக்கு இப்போது நல்ல முறையில் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. சிலர் மகப்பேறு பாக்யத்தையும் பெற்று மகிழ்வீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களில் சிலர் உங்கள் மனைவியின் பெயரில் தொழில் அல்லது வியாபாரத்தைத் தொடங்கி உபரி வருமானத்தைப் பெறக்கூடும். 

அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொழில், வியாபாரத்தில் பெரும் ஆதாயம் கிடைக்கப்பெற்று, பொருளாதார நிலையில் உயர்நிலை அடையும் வாய்ப்பும் உண்டு. அரசு வழியில் எதிர்பார்க்கும் நன்மைகள் விரைவாக அமையும். கலைஞர்களில் சிலர் விருதுகளைப் பெறக்கூடிய நிலை உண்டு.

பரிகாரம்: 

பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் கம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும். 

 

கும்பம்

பூர்வீகச் சொத்து என்று பிறர் பலத்தை நம்பாமல் உங்கள் சொந்த பலத்தை மட்டுமே உறுதியானது என நம்பி, தளராத தன்னம்பிக்கையுடன் அயராமல் உழைத்து சாதனையாளர் என்ற பெயரைப் பெறக்கூடிய செயலாற்றல் படைத்தவர், நீங்கள். உங்கள் இரக்க சுபாவத்தின் காரணமாக சிலர் பயன் பெறக் கூடுமாயின் சிலர் அதையே உங்கள் பலவீனமாகக் கருதி உங்களை ஏமாற்றவும் முற்படுவார்கள். அதன் காரணமாக நீங்கள் மனவருத்தமடைவீர்கள். சரியானபடி ஆட்களைப் புரிந்து கொள்வதன் மூலம் இக்குறையைப் போக்கிக் கொள்ளுங்கள். உங்கள் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. சந்தேகத்துக்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறை செயல்படுத்துவீர்கள். செய்தொழிலை விரிவு படுத்த சிறிது கடன் வாங்கவும் நேரலாம். 

உங்கள் பேச்சைத் திரித்து புரிந்துக்கொள்ள வாய்ப்புள்ளதால், வெளியில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவும். நெடுநாட்களாக விற்பனை ஆகாமல் இருந்த சொத்துக்கள் சிறிய தாமதத்துக்குப் பிறகே விற்பனையாகும். வழக்குகளிலும் தீர்ப்பு வர தாமதமாகும். தேவையற்ற வாய்தாக்களும் உங்களை வருத்தமடையவே செய்யும். வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதை அறிந்து கொள்வீர்கள். மற்றபடி சகோதர, சகோதரிகளிடம் உள்ளன்போடு பழகி அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆரவாரமில்லாமல் சமூகத்திற்கு நன்மை தரும் நல்ல காரியங்களைச் செய்யும் காலகட்டமாக இது  அமைகிறது.

உத்யோகஸ்தர்களுக்கு:  நீங்கள் எவ்வளவு தான் முயன்றாலும் உங்கள் முயற்சிகளில் தடங்கல், தாமதங்களைத் தவிர்க்க முடியாது. உங்கள் உயரதிகாரிகளின் கண்டனங்களுக்கு ஆளாகாமல் தப்ப, உங்கள் பணிகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வரவேண்டும். உங்கள் வசமுள்ள  ஆவணங்களை பத்திரமாகப் பாதுகாத்து வர வேண்டியதும் அவசியம். 

வியாபாரிகளுக்கு: எதிர்பார்த்த லாபம் இருக்காது. எனவே, சிக்கனத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வேலையாட்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்த்து பொருளாதார நெருக்கடி வராமல் காக்கலாம். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு கூட்டாளிகளுடன் மனக்கசப்பு நேர வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை. 

கலைத்துறையினருக்கு: முயற்சி செய்தால் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம். உங்களால் நேரடியாக செய்து  முடிக்கக் கூடியவற்றை நீங்களாகவே செய்வது எதிர்கால குழப்பத்திலிருந்து உங்களை காப்பாற்றும். உங்கள் பெயருக்குப் பெருமை சேர்க்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவீர்கள்.

மாணவர்களுக்கு: ஒருமுறைக்குப் பலமுறை பாடங்களை படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். விளையாட்டுகளில் கவனத்தைக் குறைத்து, பாடங்களில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் படிப்பில் மேன்மை நிலையை அடையலாம். 

அரசியல்வாதிகளுக்கு:  உங்களின் பணிகளில் கவனம் செலுத்துவது நன்மையைத் தரும். மேலிடத்தில் உங்களைப் பற்றி அவதூறு கூறுபவர்கள் உங்களுடனேயே இருப்பார்கள். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். தலைமை உங்களைப் புரிந்துகொண்டு உங்களுக்குப் பொறுப்பான பதவிகயையும், பொருளாதார உதவியையும் செய்வார்கள். 

பெண்களுக்கு: குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவை தானாகவே நிவர்த்தியாகி விடும். கோபத்தைக் குறைப்பதன் மூலம் சிக்கல்கள் தீரும். வேலைக்குப் போகும் பெண்கள் சரியான நேரத்தைக் கடைபிடிப்பது அவசியம். உங்கள் ரகசியங்களை எவரையும் நம்பி வெளிப்படுத்தாமலிருப்பது நன்மையைத் தரும்.

நட்சத்திரப் பலன்கள்

அவிட்டம் 3, 4ம் பாதங்கள்: இந்த ஆண்டு தொழில், வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். எனினும் நஷ்டம் ஏற்படாது. கவலை வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியும், துன்பமும் மாறிமாறி வரலாம். மாணவ மணிகளும், கலைஞர்களும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குத் திருமண வாய்ப்புகள் அமையக் கூடும். பெண்களால் சிலர் அனுகூலம் பெறுவர். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். 

சதயம்: இந்த ஆண்டு குடும்பத்தில் ஏற்படும் சிறு மனக்குழப்பங்களை உங்கள் பொறுமையின் மூலம் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து, திட்டமிட்டு நிதானமாகச் செயல்படுவதன் மூலம் சங்கடங்கள் குறையும். தெய்வ அனுகூலத்தால் பொருளாதார நிலையில் எவ்வித சங்கடமும் வராது. தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்: இந்த ஆண்டு சிறுசிறு தடைகளுக்குப் பிறகு வெற்றி நிச்சயம் உண்டு. தெய்வ அனுக்கிரகம் உங்களைக் காக்கும். கடிதப் போக்குவரத்தின் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளின் தொந்தரவு காணப்பட்டாலும், பேச்சுவார்த்தை மூலம் சரி செய்து விடலாம். நண்பர்கள் பெருமளவில் உதவியாக இருப்பார்கள். 

பரிகாரம்: 

பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்னைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

‘‘ ஓம் நமோ நாராயணா’’ என்று தினமும் 108 முறை கூறுங்கள்

 

மீனம்

எப்போதும் இன்முகத்துடனும், இனிய பேச்சுடனும் இருக்கும் நீங்கள் எல்லோரிடமும் பழகி எல்லோரையும் உங்கள்பால் ஈர்த்துக் கொள்வீர்கள். ஆடம்பரமாகவும், மிடுக்காகவும் உடையணிவீர்கள். கவர்ச்சியாகவும், கம்பீரமாகவும் காணப்படுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும், உதவிகளும் எப்போதும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால், அந்த அளவுக்கு நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவது கடினம்தான். எதிர்பாலினத்தவரிடம் கவனமாக இருப்பது அவசியம். பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வதன் மூலம் உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெரும். 

ஆலயத் திருப்பணிகளுக்கு செலவு செய்து புகழடைவீர்கள். மனதிலும் வைராக்கியம் கூடும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுயநலமில்லாமல் அனைவருக்கும் உதவி  செய்வீர்கள். மனதிற்கினிய சமூக விழாக்களில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்கள் உங்களை பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். பயணங்கள் செய்து அதன்மூலம் நன்மைகள் பெறுவீர்கள். 

உத்யோகஸ்தர்களுக்கு: உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சகபணியாளர்களின் ஒத்துழைப்பை கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத வருமானம் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருந்தவர்கள் குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். புத்திரப்பேறு, வண்டி, 
வாகனம் வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடைபெறும். 

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். போட்டியாளர்களால் உங்கள் வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க முடியாது. அதேபோல் நீங்களும் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யும்போது கவனமுடன் இருப்பது அவசியம். கடன் தொகையை நிலுவையில் விடுவது சிரமத்தை ஏற்படுத்தும். கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு: புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். வண்டி, வாகன வசதிகள் அமையக்கூடும். விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். நேரத்திற்கு வேலைகளை முடித்துக் கொடுத்து நற்பெயர் எடுப்பீர்கள். சககலைஞர்களிடம் பகைமை ஏற்படுத்துவதைத் தவிர்க்கவும். 

மாணவர்களுக்கு: படிப்பில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். அதன்மூலம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர் மட்டுமின்றி  அனைவரும் பாராட்டும் அளவிற்கு நீங்கள் நடந்து கொள்வீர்கள். சிலருக்கு வேலை வாய்ப்பும் படிக்கும் போதே அமையும். உயர்கல்விக்காக சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு: பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும். மேலிடத்திலிருந்து முழு ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் சொல்லுக்கு தனிப்பட்ட மரியாதை கிடைக்கும். பொருளாதார நிலையிலும் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியடைய வைப்பீர்கள். மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிடாமல் உங்களின் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

பெண்களுக்கு: குடும்பத்தில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். குடும்பத்தினரின் அன்பையும், நன்மதிப்பையும் குறைவரப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வேலைக்குப் போகும் பெண்கள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறுவீர்கள். சிலருக்கு திடீர் திருமண வாய்ப்பும் கிடைக்கப் பெறும். புத்திரப்பேறும் கிடைக்கப் பெறுவீர்கள். மறைமுக சேமிப்புகள் தக்க நேரத்தில் உதவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. 

நட்சத்திரப் பலன்கள்

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த ஆண்டு, உத்யோகஸ்தர்களின் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் தடையின்றி நடந்து முடியும். மருத்துவச் செலவுகள் குறைந்துவிடும். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருக்கும். மனைவி வழியில் அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பூர்வீகச் சொத்து வகையில் சிலர் எதிர்பாராத தனலாபத்தைப் பெறுவீர்கள்.

உத்திரட்டாதி: இந்த ஆண்டு, சிறு தடங்கலுக்குப் பின் காரிய வெற்றி கிடைக்கும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீர்ந்து விடும். கோபத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வது நல்லது. 

ரேவதி: இந்த ஆண்டு, நன்மையும் தீமையும் கலந்த பலன்களாகவே இருக்கும். உத்யோகஸ்தர்கள் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம். நீண்டநாட்களாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உறவினர் வருகை, சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பணவரவில் தடை இருக்காது. 

பரிகாரம்: 

சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது நன்மை. 

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் ஷம் ஷண்முகாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.